உலு லங்காட், மார்ச் 31: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வது உட்பட தற்போதைய சூழல் தொடர்பான இரண்டு முக்கியக் கூட்டங்களின் முடிவுகளை ஆராய்ந்த பின்னர், வீட்டிலிருந்து வேலை செய்யும் (BDR) கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த இறுதி முடிவை சிலாங்கூர் அரசாங்கம் அடுத்த வாரம் எடுக்கும்.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை, பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று, மாநில நிர்வாகம் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த புதன்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை வகுக்க வியாழக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் பிற மாநிலத் தலைவர்களுடன் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
"இன்று மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில், இது தொடர்பான ஒரு கட்டமைப்பைத் தயாரிக்குமாறு மாநில மனிதவளத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த இரண்டு முக்கியக் கூட்டங்களின் முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாகக் கூறினேன்."
"எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதும், ஊழியர்களின் உற்பத்தித்திறனில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொள்வதுமே, வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்," என்று அவர் புஞ்சாக் அம்பாங் லுக் அவுட் பாயிண்டை (ALOP) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் மற்றும் டூரிசம் சிலாங்கூர் தலைமைச் செயல் அதிகாரி சுவா யீ லிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொதுச் சேவை ஊழியர்களுக்காகப் படிப்படியாக வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற நெகிழ்வான வேலை முறைகளைச் செயல்படுத்தும் கூடுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கடந்த வியாழக்கிழமை பிரதமர் அன்வார் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் சில நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுத்திய நடவடிக்கைகளுக்கு ஏற்ப, தனியார் துறையினரும் இதேபோன்ற அணுகுமுறையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து, பல ஆசியான் நாடுகளும் இதே போன்ற கொள்கைகளைப் பரிசீலித்து வருகின்றன.
வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த இறுதி முடிவை சிலாங்கூர் அரசாங்கம் அடுத்த வாரம் எடுக்கும்
31 மார்ச் 2026, 2:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
அரசு ஊழியர்கள் படிப்படியாக வீட்டிலிருந்து பணியாற்றலாம் - பிரதமர்
Shalini Rajamogun
27 மார்ச் 2026

national
வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
Shalini Rajamogun
16 மார்ச் 2026

national
அரசு ஊழியர்களுக்கான 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மார்ச் 2026

national
அரசுத் துறையில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையைச் செயல்படுத்த பரிசீலனை
Shalini Rajamogun
13 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




