ஈப்போ: ‘தீடோர் லம்பாக்’ எனப்படும் கூட்டாகத் தூங்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன், ஏற்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட இலக்கா அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்றும், இத்தகைய நிகழ்ச்சிகள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் பேரா மாநில முஃப்தி துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒரு நிகழ்ச்சியின் நோக்கம் ஷரியா சட்டங்களுக்கு உட்பட்டு, மனித மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் வெற்றிகரமாக அடையப்பட வேண்டும் என்றால், மாநில முஃப்தி மற்றும் இஸ்லாமிய சமயத் துறைகளின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்று அந்தத் துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"நினைவுகளைப் புதுப்பிக்கவும், பழைய நினைவுகளை அசைபோடவும் நடத்தப்படும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை இல்லை. இருப்பினும், இவ்வுலகிலும் மறுமையிலும் மனிதர்களின் பாதுகாப்பை வழிநடத்தும் ஷரியா வழி காட்டுதல்களுக்கு அது கட்டுப் பட்டிருக்க வேண்டும்," என்று அந்தத் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசிய சமூகத்தின் தனித்துவமான அனுபவங்கள் அல்லது கலாச்சாரத்திலிருந்து இந்த நிகழ்ச்சி உத்வேகம் பெற்றதாக பேரா முஃப்தி துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்குத் திரும்பும்போது அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக உறங்கும் சூழலை இது மீண்டும் உருவாக்குகிறது.
இந்த நிகழ்ச்சி, பழைய கலாச்சார அனுபவத்திற்கு நவீன வடிவம் கொடுத்து புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், சமூக உறவுகளை ஊக்குவிக்கவும், இதுபோன்ற சூழலை அனுபவித்திராத தனிநபர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கவும் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஈப்போ மாநகரில் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது.
"இந்த நிகழ்ச்சியின் முழுமையான நடவடிக்கைகளையும் துறை எதிர்க்கவில்லை. இருப்பினும், இஸ்லாத்திற்கு அவதூறு ஏற்படாத வகையில், அதன் ஷரியா மற்றும் மலாய் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் கவனமாக ஆராயப்பட வேண்டும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஷரியாவை செயல்படுத்துவது மனிதகுலத்தின் நலனுக்காகவே. தனிநபர்கள் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களுக்கும் இது பொருந்தும்.
இந்த இரண்டு இரவு நிகழ்ச்சி, அமைதி மற்றும் கடந்தகால நினைவுகளைக் கொண்டுவரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தாலும், மஹ்ரம் இல்லாத ஆண்களும் பெண்களும் தங்களின் விருப்பத்தின் பேரில் ஒன்றாகக் கலப்பது (இக்திலாத்), ஷரியாவுக்கு முரணான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே முக்கிய கவலையாகும்.
பார்வையைக் கட்டுப்படுத்துவதில் சிரமம், அவ்ரத் வரம்புகள் மீறப்படுவது, மஹ்ரம் இல்லாதவர்களுடன் உடல்ரீதியான தொடர்பு மற்றும் ஷரியாவால் தடைசெய்யப்பட்ட பிற விஷயங்கள் இதுபோன்ற கலப்பின் போது ஏற்பட வாய்ப்புள்ளது.
தீடோர் லம்பாக்’ எனப்படும் கூட்டாகத் தூங்கும் நிகழ்ச்சியை நடத்த பேரா மாநில முஃப்தி எதிர்ப்பு.
28 மார்ச் 2026, 1:58 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




