தெமெர்லோ, 22 மார்ச்: கடந்த மாதம் இணையதளம் மூலம் விளம்பரப் படுத்தப் பட்ட போலி முதலீட்டு திட்டத்தில் ஏமாற்றப் பட்டதால், 34 வயதுடைய ஒரு ஒப்பந்ததாரர் RM356,342 இழந்துள்ளார்.
பகாங் மாநில காவல் துறைத் தலைவர் டத்துக் ஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்ததாவது, அந்த நபர் கடந்த பிப்ரவரி 18 அன்று Google-ல் “marinasand” என்ற இணையதளத்தின் மூலம் முதலீட்டு விளம்பரத்தை பார்த்துள்ளார்.
“அதனைத் தொடர்ந்து அவர் பதிவு செய்து, முதலீட்டில் இணைந்தார். அந்த திட்டம் முதலீட்டு தொகையின் 10% லாபத்தை வழங்கும் என்று வாக்குறுதி அளித்தது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் தனது தனிப்பட்ட சேமிப்பும், தனது நிறுவனத்தின் பணத்தையும் பயன்படுத்தி, பிப்ரவரி 18 முதல் மார்ச் 19, 2026 வரை ஐந்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் 16 முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.
“முதலில் அவர் சுமார் RM1,000 அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றார். அதன் பின்னர் வாக்குறுதியளிக்கப் பட்டபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை. மேலும், அந்த முதலீட்டு இணைய தளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அவர் மோசடியில் சிக்கியுள்ளதை உணர்ந்தார்,” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் எந்த முதலீட்டையும் செய்யும் முன் அருகிலுள்ள காவல் நிலையத்திடம் ஆலோசனை பெற வேண்டும் என்று யஹாயா அறிவுறுத்தினார்.
மேலும், எந்த நிதி பரிவர்த்தனையையும் செய்வதற்கு முன், மலேசிய அரச காவல் துறையின் “Semak Mule” இணையதளம் மூலம் வங்கி கணக்கு எண்ணை சரிபார்க்கவும், மோசடி சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தேசிய மோசடி பதில் மையத்தை 997 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அவர் பரிந்துரைத்தார்.





