கோலாலம்பூர், மார்ச் 21 — கெடா மாநிலத்தின் பாடாங் தெராப் பகுதியில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி, லெவல் இரண்டு (வெப்ப அலை) வெப்பநிலை நிலவுகிறது என்று மலேசிய வானிலைத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
அதே வேளையில், மலாயா தீபகற்பத்தில் மேலும் 10 பகுதிகள் லெவல் ஒன்று (எச்சரிக்கை) அளவில் உள்ளன என்று அது அறிவித்தது. இதில் முழு பெர்லிஸ் மாநிலமும், கெடாவின் குபாங் பாசு, பொக்கோ சேனா, சிக், பூலாவ் லாங்காவி, கோல மூடா, பெண்டாங், பாலிங் மற்றும் பண்டார் பாரு ஆகிய இடங்களும், பினாங்கு வடகிழக்கு மாவட்டமும் அடங்கும்.
மெட்மலேசியா வெளியிட்ட அறிக்கையில், எச்சரிக்கை அளவு என்பது தொடர்ச்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35°செல்சியஸ் முதல் 37°செல்சியஸ் வரை இருப்பதைக் குறிக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை அளவு என்பது அதே காலக் கட்டத்தில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37°செல்சியஸ் முதல் 40°செல்சியஸ் வரை இருப்பதாக வரையறுக்கப் படுகிறது.
பொதுமக்கள் தினசரி வெப்பநிலை நிலவரம் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.




