மேற்கு ஆசியா போர் உலக எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய விநியோக இடையூறை ஏற்படுத்தி உள்ளதாக (IEA) கூறுகிறது.

21 மார்ச் 2026, 4:56 AM
மேற்கு ஆசியா போர் உலக எண்ணெய் சந்தையில்  மிகப்பெரிய விநியோக இடையூறை ஏற்படுத்தி உள்ளதாக  (IEA) கூறுகிறது.

பிரஸ்ஸல்ஸ், மார்ச் 20 — சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உலகெங்கிலும் உள்ள அரசுகள், வணிகங்கள் மற்றும் வீடுகளுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்து எண்ணெய் தேவையைக் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் உலக எண்ணெய் சந்தையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய விநியோக இடையூறை ஏற்படுத்தி உள்ளது. அனடோலு எஜன்சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த மோதல் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக செல்லும் எண்ணெய் ஏற்றுமதியை கடுமையாகக் குறைத்துள்ளது. இந்த நீரிணை பொதுவாக உலகின் சுமார் 20 சதவீதம் எண்ணெயைச் சுமந்து செல்கிறது.

உலகில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக மூல எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு அமெரிக்க டாலர் 100-க்கு மேல் உயர்ந்துள்ளது. டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் திரவமாக்கப் பட்ட பெட்ரோலிய வாயு (LPG) ஆகியவற்றின் விலைகளும் பெருமளவில் உயர்ந்துள்ளன.

“மத்திய கிழக்கில் நடைபெறும் போர் ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது உலக எண்ணெய் சந்தையின் வரலாற்றில் மிகப்பெரிய விநியோக இடையூறாகும். விரைவில் தீர்வு காணப் படாவிட்டால், எரிசக்தி சந்தைகள் மற்றும் பொருளாதாரங்கள் மீதான தாக்கம் மேலும் மேலும் கடுமையாகும்,” என்று IEA நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

IEA மேலும் பின்வரும் நடவடிக்கைகளை விரைவாக அமல்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது:-
தொலைவிலிருந்து பணிபுரிதல் (remote working) மூலம் பயணத்தை குறைத்தல்
 - நெடுஞ்சாலை வேக வரம்புகளை குறைத்தல்  - பொது போக்குவரத்தை ஊக்குவித்தல்  
- பெரிய நகரங்களில் தனியார் கார்களை மாறி மாறி பயன்படுத்த அனுமதிக்கும் திட்டங்கள்  கார் பகிர்வு (car sharing),
-தனி மற்றும் வணிக வாகனங்களுக்கான திறமையான ஓட்டுதல் முறைகளும் வலியுறுத்தப் பட்டுள்ளன.
-சாலை போக்கு வரத்துக்கு அப்பால், அத்தியாவசியமற்ற விமானப் பயணங்களைக் குறைத்து ஜெட் எரிபொருள் அழுத்தத்தைத் தணிக்கவும்,
-சமையலுக்கு LPG-ஐ முன்னுரிமை கொடுத்து, சாத்தியமான இடங்களில் மின்சார சமையல் போன்ற நவீன மாற்றுகளை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தொழில்துறைக்கு, LPG-ஐ மாற்று மூலப்பொருட்களுக்கு மாற்றுதல் மற்றும் திறன் நடவடிக்கைகளை அமல்படுத்துதல் ஆகியவை அத்தியாவசியத் தேவைகளுக்கு எரிபொருளை விடுவிக்க உதவும். இந்த தேவைப் பக்க நடவடிக்கைகள் இழந்த விநியோகத்தை முழுமையாக மாற்ற முடியாது என்றாலும், பரவலாக அமல்படுத்தினால் நுகர்வோருக்கு செலவைக் குறைக்கவும், சந்தை அழுத்தத்தைக் குறைக்கவும், ஹார்முஸ் நீரிணை வழியாக சாதாரண எண்ணெய் ஓட்டம் மீண்டும் தொடங்கும் வரை முக்கியமான பயன் பாடுகளுக்கு எரிபொருளைப் பாதுகாக்கவும் உதவும் என்று IEA வலியுறுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் பிராந்திய பதற்றம், பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து தீவிரமடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் அப்போதைய உச்சத் தலைவர் அலி கமேனி (Ali Khamenei) உம் அடங்குவார்.ஈரான் பதிலடியாக பிராந்தியம் முழுவதும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மேலும், உலக எண்ணெய் சந்தையின் முக்கிய போக்குவழியான ஹார்முஸ் நீரிணையை பெரும்பாலான கப்பல்களுக்கு மூடியுள்ளது. இந்த நீரிணை தினசரி சுமார் 2 கோடி பீப்பாய் எண்ணெயையும், உலக லிக்விஃபைட் நேச்சுரல் கேஸ் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதத்தையும் கையாளுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.