ஷா ஆலாம், மார்ச் 13: உயர் நீதிமன்றத்தின் முடிவு கிடைக்கும் வரை, ரவாங்கில் உள்ள ஓர் இந்து ஆலயத்தை இடிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு குப்ரா அறக்கட்டளைக்கு (Yayasan Kubra) செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள நிலத்தின் உரிமம் குறித்த சர்ச்சை நிலவுவதை நீதிமன்றம் கண்டறிந்ததாக மாஜிஸ்திரேட் சாய் குவான் ஹாக் கூறினார்.
இந்த ஆலயம் 1995-ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் இருந்து வருகிறது, ஆனால் தற்போதைய நில உரிமையாளர் 2021-ல் தான் நிலத்தை வாங்கியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரம் சரியான முறையில் கையாளப்படாவிட்டால், அது பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது," என்று FMT செய்திக்கு அவர் மேற்கோள் காட்டினார்.
நிலத்தின் உண்மையான உரிம நிலையை நீதிமன்றம் தீர்மானிக்க, ஆலய நிர்வாகமும் குப்ரா அறக்கட்டளையும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகளையும் அதற்கான துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று குவான் ஹாக் கூறினார்.
"இரு தரப்பினரின் ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னரே நீதிமன்றம் முடிவெடுக்கும்," என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய நிர்வாகத்தைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன் மற்றும் சச்பிரீத்ராஜ் சிங் சோஹன்பால் ஆகியோர், மாஜிஸ்திரேட்டின் இந்த முடிவு, அந்த இடத்தில் தற்போதைய நிலை (status quo) நீடிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்றனர்.
நிலம் குப்ரா அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்பதை ஆலய நிர்வாகம் மறுக்கவில்லை, ஆனால் சட்டவிரோதமான முறையில் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட விதத்தை எதிர்ப்பதாக ராஜேஷ் கூறினார்.
ஒரு வழிபாட்டுத் தலத்தை அகற்றுவதற்கோ அல்லது வெளியேற்றுவதற்கோ முறையான நீதிமன்ற உத்தரவு பெறப்பட வேண்டும்.
"நள்ளிரவில் இயந்திரங்களுடன் வந்து ஒரு வழிபாட்டுத் தலத்தை இடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்றார் அவர்.
விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக கடந்த மாதம் சம்பவ இடத்தில் காவல்துறை நிறுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார், இது பதற்றம் அதிகரிக்கக் கூடிய அபாயத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவு வரும் வரை, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் தடுப்பதற்காக, ஆலய நிர்வாகம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
ரவாங்கில் கோயில் இடிப்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் உத்தரவு
14 மார்ச் 2026, 4:03 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




