கோலாலம்பூர், மார்ச் 12: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பெரும்பாலான நாடுகள் மேற்கு ஆசியாவிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றி வரும் வேளையில், சில ஆசிய நாடுகள் அதன் தாக்கத்தைச் சமாளிப்பதற்கான உத்திகளை அறிவித்துள்ளன.
மேற்கு ஆசியாவிலிருந்து கச்சா எண்ணெயை பெரிதும் நம்பியிருக்கும் நாடுகள் இந்த அணுகுமுறையை எடுத்துள்ளன. அப்பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கணிசமான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி, எரிபொருள் விநியோகத்தைப் பாதித்துள்ளன.
மார்ச் 6 அன்று, எரிசக்தியைச் சேமிக்கவும், மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக, நிர்வாகத் துறையின் கீழ் உள்ள சில அலுவலகங்களில் நான்கு நாள் வேலை வாரத்தை அமல்படுத்துமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் உத்தரவிட்டார்.
ஒரு காணொளிச் செய்தியில், இந்த தற்காலிக ஏற்பாடு மார்ச் 9 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், நிர்வாகத் துறையின் கீழ் உள்ள குறிப்பிட்ட அலுவலகங்களுக்குப் பொருந்தும் என்றும் மார்கோஸ் கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் முன்னணி பொதுச் சேவை அலுவலகங்கள் உள்ளிட்ட அவசரகால அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முகமைகள் இந்த உத்தரவில் சேர்க்கப் படவில்லை.
அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் ஆற்றலைச் சேமிக்கவும், மின்சாரப் பயன்பாடு மற்றும் எரிபொருள் செலவினங்களை 10 முதல் 20 விழுக்காடு வரை குறைக்கவும் மார்கோஸ் அறிவுறுத்தினார்.
மார்ச் 9 அன்று, மேற்கு ஆசிய மோதல் தொடர்பான மோசமான எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிப்பதற்கான அவசரகால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வங்காளதேசம் அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் மூடிவிட்டு, நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்கூட்டியே அறிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், எரிபொருள் வீணாவதற்குக் காரணமான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளரான தன்சில் ரஹ்மான், இது குறித்துத் தொடர்பு கொண்டபோது, மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர் காரணமாக எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
நாட்டில் வீட்டிலிருந்து வேலை (WFH) அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, இதுவரை அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
"அனைவரும் தற்போது அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள்," என்றார் அவர்.
பாகிஸ்தானில், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதலால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க பல சிக்கன நடவடிக்கைகளை பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மார்ச் 9 அன்று அறிவித்ததாக சின்хуவா செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நடவடிக்கைகளின் கீழ், அரசாங்கத் துறை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 50 விழுக்காடு குறைக்கப்படும் என்றும், 60 விழுக்காடு வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்படும் என்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
மேலும், பொது மற்றும் தனியார் துறைகளில் 50 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்றும், அத்தியாவசிய சேவைகள் தவிர, அரசாங்க அலுவலகங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் அவர் கூறினார்.
ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நடப்பு வார இறுதியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மார்ச் 10 அன்று, தாய்லாந்தின் இடைக் காலப் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களைத் தொடர்ந்து, எரிசக்திப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை உடனடியாக வீட்டிலிருந்து வேலை (WFH) செய்யும் முறையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.
தாய்லாந்து அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் லலிதா பிரெர்ட்விவத்தானா, இந்த உத்தரவு பொதுத்துறையின் வள மேலாண்மைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்வதால் பொதுச் சேவைகள் பாதிக்கப் படாத துறைகளுக்குப் பொருந்தும் என்று கூறினார்.
வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா மற்றும் பயிற்சித் திட்டங்களை ஒத்திவைக்குமாறும், உள்நாட்டிலேயே அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் முகமைகளுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
"பொதுச் சேவைகள் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து அமைப்புகளும் இந்த நடவடிக்கையைச் செயல்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளன" என்று லலிதா செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கொள்கைகள் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான முறையில் சரிசெய்யப் படுவதை உறுதி செய்ய, உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி நிலவரத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தாய்லாந்து, குறிப்பாக மேற்கு ஆசியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது.
வியட்நாமும் இதேபோன்ற அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.
மார்ச் 10 அன்று, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், பயணத் தேவையையும் போக்குவரத்துப் பயன்பாட்டையும் குறைக்க முடிந்தால் தொலைதூர வேலையை ஊக்குவித்தது.
தேவையற்ற போது தனியார் வாகனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், வாகனங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் குறுகிய தூரப் பயணங்களுக்கு மிதி வண்டிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அமைச்சகம் மக்களை வலியுறுத்தியது.
வியட்நாம் மக்கள் மின்சார மற்றும் கலப்பின வாகனங்களைப் பயன்படுத்துவதையும் கருத்தில் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேற்கு ஆசியாவில் நெருக்கடி பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது தொடங்கியது, இதனால் ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க நலன்களைத் தாக்கி பதிலடி கொடுத்தது.
உலகளாவிய எரிசக்தியின் முக்கிய வழித் தடமான ஹார்முஸ் ஜல சந்தியைப் பயன்படுத்தும் எண்ணெய்க் கப்பல்கள், ஈரானிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று ஈரான் இப்போது கட்டாயப் படுத்தியுள்ளதுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் கப்பல்களை அவ்வழியே செல்ல அனுமதிக்காது என்றும் சூளுரைத்துள்ளது.
ஆசியாவில் எரிபொருள் நெருக்கடியைத் தடுக்கும் நடவடிக்கைகளில் வீட்டிலிருந்து வேலை செய்வதும் ஒன்று
12 மார்ச் 2026, 4:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
Shalini Rajamogun
16 மார்ச் 2026

national
அரசு ஊழியர்களுக்கான 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மார்ச் 2026

national
அரசுத் துறையில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையைச் செயல்படுத்த பரிசீலனை
Shalini Rajamogun
13 மார்ச் 2026

selangor
பெண்களின் சுமையைக் குறைக்க வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கை அமல்
Shalini Rajamogun
17 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




