ஷா ஆலம், மார்ச் 12 – எதிர்வரும் ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு, நாட்டின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் தனியார் துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க அரசு முன்வர வேண்டும் என மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட MTUC பொதுச்செயலாளர் காமருல் பஹாரின் மன்சூர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கும், வரி வருவாய் உயர்விற்கும் தனியார் துறை ஊழியர்களின் உழைப்பு மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் (STR) கீழ் பயன் பெறாத நடுத்தர வர்க்க ஊழியர்கள், தற்போதைய வாழ்க்கைச் செலவின உயர்வுகளால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, இப்பிரிவினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு நற்செய்தியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் எனத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ரமலான் மாதத்தை முன்னிட்டு மக்களின் சுமையைக் குறைக்க, இரண்டாம் கட்ட STR உதவித்தொகையை முன்கூட்டியே வழங்குதல் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு நிதியுதவி உள்ளிட்ட ஏழு உடனடி நடவடிக்கைகளைப் பிரதமர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மேலும் சில நற்செய்திகள் விரைவில் வெளியாகும் என பிரதமரின் மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடாவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் அந்தப் பலனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் சற்று கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று காமருல் பஹாரின் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மேபேங்க் (Maybank), சிஐஎம்பி (CIMB) மற்றும் பெட்ரோனாஸ் (PETRONAS) போன்ற பெரும் லாபம் ஈட்டும் அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC மற்றும் GLIC), அரசாங்கத்தின் முன்மாதிரியைப் பின்பற்றித் தங்கள் ஊழியர்களுக்குப் பெருநாள் நிதியுதவியை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்த MTUC, இந்த முறை பொது மற்றும் தனியார் துறை என அனைத்துத் தரப்பு ஊழியர்களும் மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாடப் பிரதமர் வழிவகை செய்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.






