வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயற்சித்தால், அமெரிக்கா “20 மடங்கு கடுமையாக” பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் போக்குவரத்தில் ஈரான் தலையிட்டால், அந்நாட்டின் எளிதில் தாக்கக்கூடிய இலக்குகளை அழித்து, மீண்டும் மீள முடியாதபடி செய்து விடுவோம் என அவர் தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் பிறகு “மரணம், தீ, கோபம்” தான் அங்கு நிலைத்திருக்கும் என ட்ரம்ப் தனது வார்த்தைகளில் கடுமையைக் காட்டினார். ஆனாலும், அத்தகைய ஒரு நிலை ஏற்படக்கூடாது எனத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எச்சரிக்கையானது, ஹோர்முஸ் நீரிணையை அதிகம் பயன்படுத்தும் சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் ஒரு ‘பரிசு’ என்றும், இந்த நடவடிக்கை பிற்காலத்தில் பாராட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
ட்ரம்பின் இந்தக் கடுமையான எச்சரிக்கை, வளைகுடாப் பகுதியில் ஏற்கெனவே அதிகரித்து வரும் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.






