ஹனோய், மார்ச் 10 – மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற தன்மையும், எரிபொருள் விநியோகத்தில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாத்தியமான இடங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு வியட்நாம் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எரிபொருள் சேமிப்பை முன்னெடுக்க அமைச்சகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வாகனங்களின் தேவையற்றப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறும், அதற்கு மாற்றாகப் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஒரே வாகனத்தில் பலர் பயணம் செய்யும் முறையை ஊக்குவிப்பதுடன், குறுகிய தூரப் பயணங்களுக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே வேளையில், நீண்ட காலத் தீர்வாகப் பொதுமக்கள் மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு மாறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் வியட்நாம் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இத்தகைய நடவடிக்கைகள் தற்போதைய சூழலில் அவசியமாகின்றன.





