பட்டர்வெர்த் மார்ச் 10;- அடெக் லாபு பெசார்’ என்ற குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட எட்டு பேர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நூர் அலியா நதிரா சே ஹசான், 22; நூருல் நடாஷா முகமது சுக்ரி, 23; முஹமட் சமீரின் ஷரோம், 35; முகமது ஐசாட் ரோஸ்மாடி, 28; ஐசால் அபுக் பக்கர், 23; முகமது ஜைனி யூசோப், 27; முஹம்மது அசிசி அப்துல் கஃபார், 22, மற்றும் முஹமட் ஃபிட்ரி அப்துல் கரீம், 31, ஆவர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், நீதிபதி ரோஸ்லான் ஹமிட் முன்னிலையில் குற்றப் பத்திரிகை தனித்தனியாக வாசிக்கப் பட்ட பின்னர், குற்றம் சாட்டப் பட்டவர்கள் எவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றப் பத்திரிகையின்படி, அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மார்ச் 2025 முதல் அக்டோபர் 16, 2025 வரை செபராங் பிறை உத்தாரா மாவட்டத்தில் உள்ள கம்போங் காஜாவில் உள்ள ஒரு வீட்டில் ‘அடெக் லாபு பெசார்’ என்ற திட்டமிட்ட குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130V (1) (சட்டம் 574) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம்.
அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்களான சுலோஷானி விஜேந்திரன் மற்றும் மரியம் ஜமீலா அப் மனாப் ஆகியோர் ஆஜராகினர்.
நூருல் நடாஷாவிற்காக வழக்கறிஞர் மஞ்சித் சிங் மான் ஆஜரானார், மற்ற ஏழு சந்தேக நபர்களுக்கும் வழக்கறிஞர் யாரும் ஆஜராக வில்லை.
ஜாமீன் உயர் நீதிமன்றத்தில் மட்டுமே கோர முடியும் என்பதால், நீதிமன்றம் ஜாமீன் வழங்க அனுமதிக்கவில்லை. வழக்கின் மறு விசாரணைக்காக மே 4-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
நேற்று, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) இயக்குநர் டத்தோ எம். குமார், பினாங்கில் கடந்த மாதம் ‘ஓப்ஸ் ஷேடோ’ மூலம் சுமார் மில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய எட்டு உள்ளூர்வாசிகளைக் கொண்ட ஒரு கொள்ளைக் கும்பலை போலீசார் முறியடித்ததாகக் கூறினார்.




