ஷா ஆலம், மார்ச் 9 - சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் சதுரங்கப் போட்டியான ‘TSV தமிழ்ப் பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டி 2026’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டி எதிர்வரும் மார்ச் 14-ஆம் தேதி, ஷா ஆலம், சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் ம.இ.கா. ஏற்பாட்டில், மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இப்போட்டியில், மாநிலம் தழுவிய அளவில் வரலாறு காணாத வகையில் 524 மாணவர்கள் பங்கேற்கப் பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இதில், 12 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கான பிரிவில் 370 மாணவர்களும், 9 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கான பிரிவில் 154 பேரும் பங்கேற்கின்றனர்.
மொத்தமாக 206 மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.வெற்றியாளர்களுக்குச் சாம்பியன், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களுக்கான பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும், சிறந்த பள்ளிக்கான விருது, சிறந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு விருதுகளும் காத்திருக்கின்றன.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் பதிவு இலவசம் என்பதுடன், காலை உணவு மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கவும், அவர்களிடையே ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.




