புத்ராஜெயா, மார்ச் 7: தகுதியுள்ள வரி செலுத்துவோருக்கு, செயலாக்கப்பட்ட வரித் திருப்பிக் கொடுப்பனவுகள், மார்ச் 2026-இன் இரண்டாவது வாரத்திலிருந்து படிப்படியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி மின்-பதிவு (e-Filing) சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைப் படிவத்தை (BNCP) சமர்ப்பித்த தனிநபர் வரி செலுத்துவோருக்கு இந்தத் திருப்பிக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று LHDN தெரிவித்தது.
"LHDN வாடிக்கையாளர் சாசனத்தின்படி, மின்-பதிவு மூலம் சமர்ப்பிக்கப்படும் வரி அறிக்கைக்கான திருப்பிக் கொடுப்பனவு 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படும். அதே வேளையில், நேரடியாகப் படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு 90 வேலை நாட்கள் வரை செயலாக்க காலம் நீடிக்கும்."
"இருப்பினும், வரி செலுத்துவோர் வழங்கும் தகவல்கள் முழுமையாகவும், துல்லியமாகவும், மேலதிக சரிபார்ப்புகள் தேவைப்படாத பட்சத்திலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே வரித் திருப்பிக் கொடுப்பனவு செயலாக்கப்படும்," என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
எனவே, திருப்பிக் கொடுப்பனவு செயல்முறை சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, வரி செலுத்துவோர் தங்களின் வங்கிக் கணக்குத் தகவல்கள் துல்லியமாகவும் தற்போதையதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறு LHDN அறிவுறுத்துகிறது.
"வரி செலுத்துவோருக்கான சேவையைத் தொடர்ந்து மேம்படுத்துவதிலும், வரிவிதிப்பு நடவடிக்கைகள் திறமையாகவும் ஆற்றலுடனும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் LHDN உறுதியாக உள்ளது," என்று அது மேலும் கூறியது.
-- பெர்னாமா




