ஷா ஆலாம், மார்ச் 7- ‘கேப்டன் பிரபா’ எனும் குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக நான்கு ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலில் உறுப்பினராக இருப்பதை குற்றமாக வரையறுக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், நால்வரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற பல வன்முறை குற்றங்களில் இந்த ‘கேப்டன் பிரபா’ கும்பல் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
‘ஓப்ஸ் ஜாக் ஸ்பாரோ’ என்ற பெயரில் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கின் அடுத்த விசாரணை தேதியை நீதிமன்றம் பின்னர் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.




