வருகை அனுமதி சீட்டைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2023-ஆம் ஆண்டு முதல் 15,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

6 மார்ச் 2026, 1:21 AM
வருகை அனுமதி சீட்டைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2023-ஆம் ஆண்டு முதல் 15,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மலாக்கா, மார்ச் 6: மலேசியாவில் தங்களுக்கு வழங்கப்பட்ட வருகை அனுமதி சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக வேலை செய்த அல்லது வணிகம் நடத்திய குற்றத்திற்காக 2023-ஆம் ஆண்டு முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை மொத்தம் 15,349 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார். இதில் 2023-இல் 2,233 பேரும், 2024-இல் 5,123 பேரும், 2025-இல் 6,872 பேரும் மற்றும் 2026-ஆம் ஆண்டின் மார்ச் 3-ஆம் தேதி வரை 1,121 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காளதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செயல்கள் வணிகச் சூழலைப் பாதிப்பதாக வர்த்தக சபைகள் புகாரளித்ததைத் தொடர்ந்து, அமைச்சரவையின் அறிவுறுத்தலின்படி குடிவரவுத் துறையின் அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையில், ரமலான் சந்தைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தோனேசியா, வங்காளதேசம், மியன்மர், பாகிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 68 வெளிநாட்டவர்கள் குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் முறையான ஆவணங்கள் இன்றி இருந்தவர்கள், காலாவதியான அனுமதி சீட்டுடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் பாஸ்போர்ட் நிபந்தனைகளை மீறியவர்கள் அடங்குவர். ரமலான் மாதத்தில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள புலம்பெயர்ந்தோர் தாயகம் திரும்பும் திட்டம் 2.0-இன் கீழ், கடந்த மே 19, 2025 முதல் மார்ச் 3, 2026 வரை 106 நாடுகளைச் சேர்ந்த 187,858 வெளிநாட்டவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 93,973,360 ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.