கோலாலம்பூர், மார்ச் 5 - மலேசியாவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2048-ஆம் ஆண்டிற்குள் 5.88 மில்லியனாக உயர்ந்து, நாடு 'முதுமையடைந்த தேசமாக' (Aged Nation) மாறும் நிலையை எட்டும் என்று இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள்தொகை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நாட்டின் ஓய்வூதியத் திட்டம் மற்றும் நிதி நிலையை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் மேலவையில் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், 2025 டிசம்பர் நிலவரப்படி ஊழியர் சேமநிதி வாரியத்தில் (KWSP) பதிவுபெற்ற முதலாளிகளின் எண்ணிக்கை 640,391-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், 2025-ஆம் ஆண்டில் மலேசியத் தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம் 2,764 ரிங்கிட்டாக அதிகரித்திருப்பதுடன், ஒட்டுமொத்த வருடாந்திரச் சேமிப்புப் பங்களிப்பு 120 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
ஓய்வூதியக் காலச் சேமிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 2024 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்குச் சீரமைப்புத் திட்டத்தின் மூலம், ஓய்வூதியக் கணக்கிற்கான ஒதுக்கீடு 75 விழுக்காடாக உயர்த்தப்பட்டு 15.7 பில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், சுயமாகக் கூடுதல் சேமிப்பைச் செய்யும் 'i-Top Up' திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் மாதம் வரை சுமார் 364,000 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.




