கிள்ளான், மார்ச் 5 - கிள்ளான், ஸ்ரீ காப்பார் பகுதியில் இன்று காலை லாரி ஓட்டுநர் ஒருவரை இலக்கு வைத்து இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை சிலாங்கூர் மாநிலக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் 9.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு வாகன ஓட்டுநர், சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிளைத் தனது வாகனத்தால் மோதியதில் அவ்விருவரும் காயமடைந்தனர்.
தற்போது அந்த இரு சந்தேக நபர்களும் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறைத் தரப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் மற்றும் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதால், சந்தேக நபர்களின் அடையாளம் மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்த விரிவான தகவல்களும் முதற்கட்ட விசாரணை அறிக்கையும் விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் உறுதியளித்துள்ளார்.




