கோலாலம்பூர், மார்ச் 4 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், இன்று இங்குள்ள தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் (UPNM) சுல்தான் இப்ராஹிம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா மற்றும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.
மாலை 7 மணியளவில் வருகை புரிந்த பேரரசரை, தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமது காலித் நோர்டின் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ரஹ்மான் அல்-ஹாஜ் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் இளவரசர் துங்கு அபு பக்கர் அல்-ஹாஜ் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் தற்காப்புப் படைத் தளபதி ஜெனரல் டத்தோ மாலெக் ரசாக் சுலைமான் ஆகியோரும் உடனிருந்தனர்.
பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவின் அடையாளமாக, மாட்சிமை தங்கிய பேரரசர் நினைவுப் பலகையில் கையெழுத்திட்டார்.
அதனைத் தொடர்ந்து, சுல்தான் இப்ராஹிம், UPNM ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்றார். பின்னர், அனைவருடனும் கூட்டாக மஃரிப் தொழுகையில் ஈடுபட்டார்.
இரவு சுமார் 8.10 மணியளவில் மாட்சிமை தங்கிய பேரரசர் அங்கிருந்து புறப்பட்டார்.




