கிள்ளான், மார்ச் 3 — கிள்ளான் மாவட்டத்தில் 13 வெள்ளத் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி அம்ரி இஸ்மாயில் தெரிவித்தார். அவற்றில் 13 திட்டங்களில் ஐந்து முக்கிய திட்டங்கள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கட்டம் கட்டமாக நிறைவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
“இதில் தாமான் மெலாவிஸ் பகுதியில் பம்ப் ஹவுஸ் கட்டுதல்; தாமான் முத்தியாரா, புக்கிட் ராஜாவில் வெள்ளநீர் சேகரிப்பு குளம் மற்றும் பம்ப் ஹவுஸ் அமைத்தல்; கம்போங் சுங்கை செர்டாங் மற்றும் கம்போங் தோக் மூடா, காப்பார் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது ஆகியவை அடங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிள்ளான் பகுதியில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகளுக்காக இந்த ஆண்டு RM98 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்ரி தெரிவித்தார்.
கிள்ளான் நகராட்சித்துறையினர் சிறந்த தூய்மையை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர், குறிப்பாக திடக் கழிவுகளின் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இதில் i-Pocket செயலி மூலம் கண்காணிப்பு, 24 மணி நேரத்திற்குள் புகார்களைத் தீர்ப்பது மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
“இந்த ஒதுக்கீட்டின் மூலம், கிள்ளான் தொடர்ந்து சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டும் இருக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘கிள்ளான் தூய்மை சிறப்பு குழு’ அமைக்கப்படும்,” என்றும் அம்ரி தெரிவித்தார்.








