ஷா ஆலம், மார்ச் 3 — இன்று முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை எதிர்பார்க்கப்படும் கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வதைத் தொடர்ந்து, அதற்குத் தயாராக இருக்குமாறு கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கிள்ளான் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, போர்ட் கிள்ளான் நிலையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் நீர் மட்டம் 5.2 மீட்டர் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் கடல் நீர் மட்டம் 4.8 முதல் 5.2 மீட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாளை பல இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில், இன்று பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மார்ச் 6-ஆம் தேதி சில இடங்களில் இதே போன்ற வானிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தாழ்வான அல்லது கடற்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சாத்தியமான அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மலேசிய வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய ஹைட்ரோகிராபி மையத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 999 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 03-33829292 என்ற எண்ணின் வழி கிள்ளான் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு மையத்தை (DDOC) அழைக்கலாம்.








