ஷா ஆலம், மார்ச் 2: அம்பாங், யூகாய் ஹைட்ஸ் பகுதியில் உள்ள முன்னாள் நகராட்சி கட்டிடம் ஒன்று கைவிடப்பட்ட பூனைகளுக்கான புகலிடமாக மாற்றப்பட்டு வருகிறது. வரும் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ள இந்த வசதிக்காக அம்பாங் ஜெயா நகராட்சி 4 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
முன்னதாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த இக்கட்டிடம், தற்போது நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பூனைகளுக்கான கூண்டுகள் மற்றும் சிகிச்சை வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் 50 பூனைகள் வரை பராமரிக்க முடியும் என்றும், மீட்கப்படும் பூனைகளுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய விலங்கு நல அமைப்புகளுடன் நகராட்சி இணைந்து செயல்படும் என்றும் அதன் துணைத் தலைவர் ஹஸ்ரோல்நிசாம் ஷாரி தெரிவித்தார். இந்தப் புகலிடம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், பொதுமக்கள் அங்கிருக்கும் பூனைகளைத் தத்தெடுத்து அவற்றுக்கு நிரந்தர இல்லம் வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், பாண்டான் ஜெயாவில் இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு வாரம் நடைபெற்ற எலி ஒழிப்பு நடவடிக்கையில் சுமார் 100 எலிகள் பிடிபட்டதாக ஹஸ்ரோல்நிசாம் தெரிவித்தார். பாண்டான் ஜெயா சந்தையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் 3 ரிங்கிட் சன்மானம் வழங்கப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தாமான் மெலாவாட்டி, தாமான் கெராமட் மற்றும் பெக்கான் அம்பாங் போன்ற குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளிலும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி ஆலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு அம்பாங் ஜெயா முழுவதும் 59 இடங்களில் எலி ஒழிப்பு முயற்சிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பெக்கான் அம்பாங் பகுதியில் மட்டும் 101 எலிகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




