ஷா ஆலம், மார்ச் 2: கிள்ளான், தெலோக் கோங் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது, முறையான உரிமம் இன்றி இயங்கி வந்த இரண்டு தொழிற்சாலைகளுக்கு எதிராகக் கிள்ளான் அரச நகராட்சி மன்றம் (MBDK) நான்கு அபராதங்களை விதித்துள்ளது. இந்தச் சோதனையின் போது, பிளாஸ்டிக் கழிவுகளைப் பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல், கனரக வாகனப் பழுதுபார்ப்புப் பணிமனை மற்றும் சேமிப்புக் கிடங்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் இரண்டு வளாகங்கள் முறையான தொழில் மற்றும் விளம்பர உரிமங்களைக் கொண்டிருந்த வேளையில், மற்ற இரண்டு வளாகங்கள் எவ்வித உரிமமுமின்றி இயங்கியது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2007-ஆம் ஆண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில் உரிமம் தொடர்பான துணைச் சட்டங்களின் கீழ் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனைத்துத் தொழிற்சாலைகளும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று கிள்ளான் அரச நகராட்சி மன்றம் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளது.




