மெல்பெர்ன், மார்ச் 2- ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வான்வெளி மூடப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள 115,000 ஆஸ்திரேலியர்களை வெளியேற்ற முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் வணிக ரீதியிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நிலைமை சீரானவுடன் ஆஸ்திரேலியர்களை தாயகம் அழைத்து வர அரசு திட்டமிட்டுள்ளது.
பிராந்தியத்தில் சுமார் 1,15,000 ஆஸ்திரேலியர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வணிக ரீதியிலான விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது அவசியம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவின் சிறப்பு விமானங்களோ அல்லது வணிக ரீதியிலான விமானங்களோ அங்கு தரையிறங்கவோ அல்லது அங்கிருந்து புறப்படவோ முடியாத சூழல் நிலவுவதாக அவர் விளக்கமளித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்கும் நோக்கில், விமான நிறுவனங்களுடன் அரசு தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
.இதனிடையே, இஸ்ரேல், ஈரான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களைப் பதிவு செய்துகொள்ள ஏதுவாக இணையதளப் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த அமைச்சர் வோங், அந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலுமே விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.








