10 நாள் 'ஓப்ஸ் பந்தாவ்': 1.09 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல், 295 வழக்குகள் பதிவு

2 மார்ச் 2026, 2:38 AM
10 நாள் 'ஓப்ஸ் பந்தாவ்': 1.09 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல், 295 வழக்குகள் பதிவு

பாப்பார், மார்ச் 2 – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் இன்றுவரை அமல்படுத்திய 'ஓப்ஸ் பந்தாவ்' நடவடிக்கையின் கீழ், 1.09 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, 295 வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.

 இந்த 10-நாள் நடவடிக்கையில், ரமலான் சந்தைகள், நோன்புப் பெருநாள் சந்தைகள், ஈரச் சந்தைகள், பொதுச் சந்தைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட நாடு தழுவிய அளவில் 16,059 வளாகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் அமைச்சர் அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

 "மொத்த வழக்குகளில், 143 வழக்குகள் விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறிய குற்றத்திற்காகவும், மேலும் 78 வழக்குகள் எடை மற்றும் அளவீட்டுக் கருவிகள் தொடர்பான குற்றங்களுக்காகவும் பதிவு செய்யப்பட்டன," என்றார் அவர்.

 "சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16,059 வளாகங்களில், 6,268 ரமலான் சந்தைகளாகும். அவற்றில் இரண்டு வழக்குகள் மட்டுமே கண்டறியப்பட்டதால், அங்குள்ள வர்த்தகர்களின் இணக்க நிலை மிகவும் திருப்திகரமாக உள்ளது," என்று அவர் இங்கு நடைபெற்ற ‘செந்துஹான் காசே, ரஹ்மா மடாணி விற்பனை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறினார்.

பெரும்பாலான குற்றங்கள், விலைப் பட்டியலை வைக்கத் தவறியது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சரிபார்க்கப்படாத எடை மற்றும் அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தியது தொடர்பானது என்று பாப்பார் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

ரம்லான் மாதம் முழுவதும் மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சட்ட விதிகள் பின்பற்றப்படுவதையும், விலைகள் சீராக இருப்பதையும், பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக 'ஓப்ஸ் பந்தாவ்' நடவடிக்கை மார்ச் 20-ஆம் தேதி வரை தொடரும் என்று அர்மிசான் கூறினார்.

இதற்கிடையில், ‘ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டம்’ (PJRM) இனி அவ்வப்போது நடத்தப்படும் ஒரு தற்காலிகத் திட்டம் அல்ல என்றும், அது அரசாங்கத்தின் ஒரு நிரந்தர முயற்சியாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 ஒவ்வொரு மாநில சட்டமன்றத் தொகுதியிலும் (DUN) மாதம் மூன்று முறை PJRM நடத்தப்படும் என்றும், மக்கள் தங்கள் வாங்கும் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வசதியாக, அமைச்சின் இணையதளத்தில் கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

 "இந்த ரமலான் மாதத்தில், நாடு முழுவதும் 1,898 PJRM திட்டங்களை நடத்த அமைச்சு இலக்கு வைத்துள்ளது. இன்றுவரை, 541 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.