குவாந்தான், பிப் 27: கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது வங்கிச் கணக்கை மற்றவர் பயன்படுத்த அனுமதித்ததை ஒப்புக்கொண்ட 33 வயது தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு, நீதிமன்றம் RM10,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், சோங் சின் ஜோங் என்ற அந்த ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி சாஸ்லினா சாஃபி உத்தரவிட்டார்.
திருமணமாகாத சோங், 2025 மார்ச் 12 இரவு 10.15 மணி முதல் மார்ச் 13 காலை 10.42 மணி வரை, லோரோங் ஸ்ரீ தெருந்தும் 21-இல் உள்ள ஒரு வீட்டில் தனது வங்கிச் கணக்கை மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்தத் தவறுக்காக அவர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 424B-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் RM10,000 முதல் அதிகபட்சம் RM100,000 வரை அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வழக்கின் பின்னணியின்படி, முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு போலி பங்கு முதலீட்டுத் திட்டத்தில் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர், கடந்த ஆண்டு மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சோங்கின் வங்கிச் கணக்கிற்கு இரண்டு தவணைகளாக மொத்தம் RM195,000 பணத்தை மாற்றியுள்ளார். கூடுதல் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தப்பட்டதாலும், முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்கும் போது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டதாலும், தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் உணர்ந்துள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் வான் நூருல் இசாதி வான் முகமது ஜஹாரியும், சோங் தரப்பில் வழக்கறிஞர் முகமது ஷுஹைரில் சிக்ருல் சபியும் முன்னிலையாகினர்.








