மலேசிய தொழிலாளர் சேமநிதி வாரியம் (KWSP), 2025-ஆம் ஆண்டுக்கான தனது டிவிடெண்ட் விகிதத்தை வரும் சனிக்கிழமை பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி அகமது சுல்கர்னைன் ஆன் பங்கேற்கும் இந்த முக்கிய விளக்கக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் ஊடகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.
முதலீட்டுச் செயல்பாடுகளின் வலுவான போக்கைக் கருத்தில் கொண்டு, இம்முறை வழக்கமான சேமிப்பிற்கு (Simpanan Konvensional) 5.8 முதல் 6.3 விழுக்காடு வரை டிவிடெண்ட் வழங்கப்படலாம் என பொருளாதார நிபுணர் டாக்டர் ஐமி சுல்ஹாஸ்மி கணித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலப்பகுதியில் இ.பி.எப் ஈட்டியுள்ள 63.99 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வருமானம், 2024-ஆம் ஆண்டின் சாதனையை விஞ்சும் வகையில் சாதகமாக அமைந்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஈட்டப்பட்ட 57.57 பில்லியன் ரிங்கிட் வருமானத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 11 விழுக்காடு உயர்வு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இ.பி.எப்-பின் மொத்த முதலீட்டுச் சொத்து மதிப்பு 1.37 டிரில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ள நிலையில், சந்தாதாரர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பதாக பொருளாதாரப் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.








