கோத்தா கினாபாலு, பிப் 24: இன்று நண்பகல் 12 மணியளவில் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 5,093 ஆக உயர்ந்துள்ளது. காலை 8 மணிக்கு அந்த எண்ணிக்கை 5,017 ஆக இருந்தது.
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையில் சிறிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சபா பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
பித்தாஸ் மாவட்டத்தில் தற்போது 2,777 பேர் தங்கியுள்ளனர்; இன்று காலை அந்த எண்ணிக்கை 2,701 ஆக இருந்தது.
“பைத்தான் மாவட்டத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,071 ஆக மாற்றமின்றி உள்ளது. தவாவ் மாவட்டத்தில் 245 பேர் தங்கியுள்ளனர்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் மொத்தம் 86 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பைத்தான் பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மேம்பட்டு வருவதால், அங்குள்ள சில தற்காலிக நிவாரண மையங்கள் இன்று பிற்பகலில் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சபாவின் உள்பகுதிகளில் இன்று காலை, பிற்பகல் மற்றும் மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மெட்மலேசியா முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.






