ஜாலான் ஸ்ரீ மஞ்சா வெள்ளம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விளக்கம்

23 பிப்ரவரி 2026, 5:30 AM
ஜாலான் ஸ்ரீ மஞ்சா வெள்ளம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விளக்கம்

பெட்டாலிங் ஜெயா,பிப் 23 - ஜாலான் ஸ்ரீ மஞ்சா மற்றும் என்.பி.இ நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு அடைபட்ட கால்வாய்கள், பராமரிப்பற்ற தனியார் தடுப்புக் குளம் மற்றும் அசாதாரண கனமழை ஆகியவையே முதன்மைக் காரணங்கள் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) தெரிவித்துள்ளது.

இரண்டு மணி நேரத்தில் பதிவான 182 மில்லிமீட்டர் அளவிலான மிக அதிகப்படியான மழையால் வடிகால் அமைப்புகள் திணறிய வேளையில், அருகில் உள்ள ஆற்று நீர் மட்டம் உயர்ந்ததால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் பின்னோக்கிப் பாய்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்ய பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் தங்கள் நிலத்திலுள்ள வடிகால் அமைப்புகளை உடனடியாகச் சீரமைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு முதல் 17 முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, நான்கு முக்கிய இடங்களில் நிரந்தர நீர் இறைக்கும் பம்புகளைப் பொருத்த வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திடம் 2 மில்லியன் ரிங்கிட் நிதி கோரப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப வடிகால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள மாநகராட்சி, பொதுமக்களும் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.