ஷா ஆலம், 18 நவம்பர்: சிலாங்கூர் அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனித வள வளர்ச்சியை முன்னிறுத்தி, அணுசக்தி செயலாக்கத்துக்கான தயார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவின் ஹார்பின் மற்றும் சிங்ஹுவா பல்கலைக்கழகங்களில் அணுசக்தி மேலாண்மை தொடர்பான படிப்புகளை தொடர அனுப்பப்படுவார்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார், டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார் .
தொடக்க கட்டத்தில், மனித வள திறனை உருவாக்குவதே முக்கியம். அணுசக்தி மூலம் மின்சக்தி உற்பத்தி தொடர்பான ஆர்வமுள்ள அதிகாரிகள் அல்லது மாணவர்கள் அனுப்பப்படுவர். நான் குறிப்பிட்டுள்ள ஐந்து ஆண்டு காலம் என்பது திறன் மேம்பாடு, செயல்திட்டம் மற்றும் முழுமையான நெறிமுறைகளை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டமாகும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மலேசியாவில் அணுசக்தி துறை இன்னும் பரவலாக ஆய்வில் இல்லை; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் அவசியம் எதிர்கால செலவைக் கூடுதலாக அதிகரிக்கக்கூடும். எனவே எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும், அணுசக்தியுடன் ஒப்பிடும்போது நிலையானதாக இல்லாத எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை மட்டும் நம்பியிருக்க முடியாது, என்று அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில பட்ஜெட் திட்டத்தில், மாநில மந்திரி புசார் அணுசக்தி கூட்டுப் பணிக்குழுவை நிறுவுவதாக அறிவித்தார். இந்தத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் அணுசக்தியின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு RM1 மில்லியன் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார்.








