கோலாலம்பூர், பிப் 27: உள்நாட்டின் முக்கியப் பிரமுகர் ஒருவர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றும் இணைந்து, நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் தேசிய நிலைத்தன்மையைச் சீர்குலைக்கவும் முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பான புகார் நேற்று பெறப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (D5) இந்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் நேரடி அல்லது மறைமுகச் செயல்பாடுகளைக் கையாளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124B-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முறையான விசாரணைகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் எவ்வித யூகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும், நாட்டின் குற்றவியல் நீதி நெறிமுறைகளுக்கு மதிப்பளிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.




