கோலாலம்பூர், பிப். 26-- 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2027 மலேசிய கடல் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, நாட்டின் காம்பவுண்ட் பிரிவு வில்வித்தை அணியைத் தயார்படுத்தும் நோக்கில், நான்கு தேசிய ஆண் வில்வித்தை வீரர்கள் ஆசியாகோம் (ASIAKOM) உயர்திறன் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இவ்வருடம் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவிருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வீரர்களான முகமட் ஜுவைதி மசுகி, அலாங் அரிஃப் அகில் முஹம்மட் கசாலி, முஹம்மட் ஷாஃபிக் புஸ்தாமிம் மற்றும் ஐமான் ஷாஃபிக் தாரிக்கி ஆகியோர் இந்தத் திட்டத்தில் இடம்பெறுவார்கள் என மலேசிய தேசிய வில்வித்தை சங்கத்தின் (NAAM) தலைவர் அப்துல் ஹமீத் ஹசன் தெரிவித்தார்.
இந்தத் திட்டம், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (LA2028) வீரர்களைத் தயார்படுத்துவதற்கான ஒரு நீண்டகால வியூகத் திட்டம் என்றும் அவர் கூறினார். "ஆசியாகோம் திட்டம் தொடக்கத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இலக்கு வைக்கப்பட்டாலும், ஒலிம்பிக் வரை இது தொடரும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். LA2028 ஒலிம்பிக்கில் காம்பவுண்ட் பிரிவு கலப்பு அணிப் பிரிவில் போட்டியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று இன்று தேசிய விளையாட்டு மன்றத்தில் நடைபெற்ற 2026 செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வீரர்களின் தற்போதைய செயல்திறன், உலகத் தரவரிசையில் முன்னேறுவதற்கான ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நால்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குப் படி அதிகரிக்கப்படுவதுடன், தொடர்ச்சியான போட்டி அனுபவத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்னுரிமையும் வழங்கப்படும் என்றும் அப்துல் ஹமீத் குறிப்பிட்டார்.
இதனிடையே, LA2028-ஐ முன்னிட்டு சிறந்த கலப்பு அணியை உருவாக்கும் நோக்கில், பெண் வீராங்கனைகளின் தேர்வு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 2027 கடல் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.


