இஸ்லாத்தை இழிவுபடுத்திய விவகாரம்: பகாங் பல்கலைக்கழக மாணவர் போலீசாரால் கைது

25 பிப்ரவரி 2026, 8:07 AM
இஸ்லாத்தை இழிவுபடுத்திய விவகாரம்: பகாங் பல்கலைக்கழக மாணவர் போலீசாரால் கைது

குவாந்தான், பிப் 25 - சமூக ஊடகங்களில் இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கும் வகையில் பதிவிட்டதோடு, திருக்குர்ஆனை மிதித்ததாகக் கூறப்படும் பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக (UMPSA) மாணவர் ஒருவரைப் போலீசார் இன்று அதிகாலை குவாந்தானில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

குர்ஆனை மிதிக்கும் புகைப்படம் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் கருத்துக்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்டுகள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டதாகப் பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஒத்மான் உறுதிப்படுத்தினார்.

சந்தேகத்திற்குரிய அந்த மாணவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியைப் பெற போலீசார் இன்று நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவுள்ளனர்.

மதங்களை அவமதிக்கும் இத்தகைய செயல்கள் தொடர்பாக, குற்றவியல் சட்டத்தின் 295-வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அத்துடன், இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தி மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233-வது பிரிவின் கீழும் அந்த மாணவர் மீது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டின் கீழ் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் சமூக ஊடகங்களில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.