கோலாலம்பூர், பிப் 24 - நாடற்ற குழந்தைகளுக்குச் சரியான அவசர சிகிச்சை மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல்களில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் ஒருபோதும் மறுக்காது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமது உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றக் கேள்விக்குப் பதிலளித்த அவர், மனிதநேய அடிப்படையில் நாடற்ற குழந்தைகள் உட்பட அனைவருக்கும் சுகாதாரச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யத் தமது அமைச்சகம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
உயிர்களைக் காப்பதும், தேவையுள்ளவர்களுக்குச் சமமான சிகிச்சையை வழங்குவதுமே அமைச்சகத்தின் முக்கியக் கொள்கை என உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சானி ஹம்ஸான் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், அவசர மற்றும் விபத்துப் பிரிவுகளில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி உடனடியாகக் கவனிக்கப்படுவதை 'தவறான கதவு இல்லை' (No Wrong Door) எனும் கொள்கையின் கீழ் அமைச்சகம் உறுதி செய்கிறது.
இருப்பினும், 2014ஆம் ஆண்டு மருத்துவக் கட்டணக் கட்டளையின்படி, மலேசியக் குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் வெவ்வேறு கட்டண விகிதங்கள் வசூலிக்கப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இதன்படி, முறையான ஆவணங்கள் இல்லாத நாடற்ற குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சையின் போது வெளிநாட்டினருக்கு இணையான கட்டணமே விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




