மலேசியாவில் வருவாய் ஈட்டாத நீர் (NRW) இழப்பைக் குறைப்பதில் சிலாங்கூர் மாநிலம் சாதனை

24 பிப்ரவரி 2026, 7:18 AM
மலேசியாவில் வருவாய் ஈட்டாத நீர் (NRW) இழப்பைக் குறைப்பதில் சிலாங்கூர் மாநிலம் சாதனை

ஷா ஆலம், பிப்ரவரி 24 — வருவாய் ஈட்டாத நீர் இழப்பைக் குறைப்பதில் சிலாங்கூர் மாநிலம் நாட்டின் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, ஜோகூர் மாநிலமும் இதில் வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் பேசிய அவர், வலுவான நிர்வாக அர்ப்பணிப்பு காரணமாக சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்கள் இந்த நீர் இழப்பைக் குறைப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2024-ஆம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்த நீர் இழப்பு விகிதம், 2025-ஆம் ஆண்டில் 26.76 சதவீதமாகக் குறைந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜோகூர் மாநிலம் மட்டுமே தற்போது சிலாங்கூரை விடச் சிறந்த நிலையில் உள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் நீர் கசிவைக் கண்டறியவும், நீர் விநியோகத்தைக் கண்காணிக்கவும் மொத்தம் 569 மாவட்ட அளவீட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தாக்க அறிக்கை கூறுகிறது.

 மேலும் நீர் இழப்பைக் குறைப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சியும் பெரும் முதலீடும் அவசியம் என்றார். தற்போதைய நீர் கட்டணங்கள் செயல்பாட்டுச் செலவுகளை முழுமையாக ஈடுகட்டாததால், சில மாநில நீர் நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திப்பதோடு திட்டமிடப்பட்ட பணிகளைச் செயல்படுத்துவதில் தாமதத்தை எதிர்கொள்கின்றன. இருப்பினும், ஆகஸ்ட் 2025-இல் தொடங்கப்பட்ட 'கட்டண நிர்ணய பொறிமுறை' (TSM), நீர் நிறுவனங்களின் பணப்புழக்கத்தை மேம்படுத்தி இத்தகைய நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவும் என்று அவர் விளக்கினார்.

 தேசிய அளவில் 2025 முதல் 2030 வரையிலான காலக்கட்டத்திற்கு 2.525 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'தேசிய வருவாய் ஈட்டாத நீர் குறைப்புத் திட்டத்தை' ஃபாடில்லா முன்னிலைப்படுத்தினார்.இத்திட்டம் பழுதடைந்த உள்கட்டமைப்புகளை மாற்றுவதையும், துல்லியமான அளவீட்டிற்காக மீட்டர் கருவிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், நீர் இழப்பை 50 சதவீதம் மற்றும் 75 சதவீதம் வரை குறைக்கும் நிறுவனங்களுக்கு, அவர்கள் செய்த முதலீட்டில் முறையே பாதி மற்றும் முக்கால்வாசித் தொகையைத் திரும்ப வழங்கும் ஊக்கத்தொகை முறையையும் அவர் அறிவித்தார். நுகர்வோருக்குப் சுமை ஏற்படாத வகையில், மத்திய அரசு மற்றும் மாநில நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.