ஷா ஆலம், பிப்ரவரி 21: சிலாங்கூரில் குடியிருப்பு பகுதிகளில் செயல்படும் அனைத்து வாகன பட்டறைகளும் குடியிருப்பாளர்களுக்கு இடையூறுகளை குறைக்க இலகு ரக தொழில்துறை மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் நகரண்மைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் இந்த நடவடிக்கை நெரிசல், ஒலி மாசுபாடுகள் மற்றும் பட்டறை வாடிக்கையாளர்களின் வாகனங்களால் வீடமைப்பு பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். "இந்த இடமாற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்படும், பட்டறை ஆபரேட்டர்களுக்கு முன்கூட்டியே நினைவூட்டல் அறிவிப்பு வழங்கப்படும்". "வணிக வளாகங்கள் ஒரு இலகுவான தொழில்துறை பகுதியில் அமைந்திருந்தால் மட்டுமே இனி வரும் புதிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப் படும்" என்றும் அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, வாகன என்ஜின் சத்தம் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர் வாகனங்கள் அதிகரிப்பது குறித்து குடியிருப்பாளர்களிடம் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. "இலகுவான தொழில்துறை மண்டலத்தில் பட்டறையை மையப் படுத்துவதே தீர்வுகளில் ஒன்றாகும், அங்கு உபகரணங்கள், பணியிடங்கள் மற்றும் சேமிப்பிற்கான தளவமைப்பை மேலும் முறையாக திட்டமிட முடியும்" என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள ஆபரேட்டர்களுக்கு திட்டமிடல் குறித்து விளக்கப் பட்டுள்ளதாகவும், பெரும்பான்மையானவர்கள் அறிவுறுத்தல் களுக்கு இணங்கியதாகவும், ஆனால் இடமாற்றம் செய்ய மறுக்கும் சிலர் இன்னும் உள்ளனர் என்றும் சுய் லிம் தெரிவித்தார்.
"ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுடன் பணிமனை ஆபரேட்டர்கள் இடமாற்றம் செய்ய உள்ளூர் அதிகாரிகள் ஒரு நியாயமான காலத்தை வழங்குவார்கள்".
"அவர்கள் பிடிவாதமாக இருந்து, இருக்கும் இடத்தை விட்டு நகர மறுத்தால், கவுன்சில் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்ட சட்டத்தை விவரிக்காமல் அவர் கூறினார்.
இதற்கிடையில், சுபாங் ஜெயா துணை மேயர் முகமது சுல்குர்னைன் சே அலி கூறுகையில், சுபாங் ஜெயா உள்ளூர் திட்ட வரைவு 2035 (திருத்தம் 1) வாகன பட்டறைகளை தொழில் துறை பகுதிகளில் மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று கூறுகிறது.
கலப்பு மேம்பாட்டுப் பகுதிகளில் செயல் படுவதற்கு சுபாங் ஜெயா நகர சபை (எம். பி. எஸ். ஜே) புதிய வாகன பணிமனைக்கு அனுமதிகளை வழங்காது என்று அவர் கூறினார். தற்போதுள்ள செயல்பாடுகளை தரப்படுத்த புஞ்சாக் ஜாலீல் மற்றும் ஸ்ரீ கெம்பங்கன், லெஸ்டாரி ஜெயாவில் ஏழு தற்காலிக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுபாங் ஜெயா பகுதியில் இடமாற்றம் செய்ய 379 பட்டறைகளுக்கு எம். பி. எஸ். ஜே அமலாக்கத் துறையும் நோட்டீஸ் அனுப்பியது "என்று அவர் கூறினார்.
ஷா ஆலத்தில், மேயர், டத்தோ முகமது ஃபவுஸி முகமது யதிம், தனது குழு கடந்த நவம்பரில் தொழில் முனைவோருடன் ஒரு உரையாடல் அமர்வை நடத்தியதாக தெரிவித்தார். ஜூலை 2025 வரை, மொத்தம் 545 பணிமனை விண்ணப்பங்கள் MBSA ஆல் பெறப்பட்டன. அந்த மொத்தத்தில், 177 அங்கீகரிக்கப் பட்டன, 142 நிபந்தனைக்குட்பட்ட தற்காலிக உரிமங்கள் வழங்கப்பட்டன, 11 ஒத்திவைக்கப்பட்டன, 215 நிராகரிக்கப்பட்டன "என்று அவர் கூறினார்.




