அலோர் ஸ்டார், பிப் 19: பெண்டாங், ஜாலான் தீத்தி கோபா மேம்பாலத்தில் நேற்று இரவு நிகழ்ந்த கோர விபத்தில், பல்நோக்கு வாகனத்தில் பயணம் செய்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இரவு சுமார் 11.30 மணியளவில் நிகழ்ந்ததாகப் பெண்டாங் மாவட்ட போலீஸ் தலைவர், சுப்பிரிண்டெண்டன்ட் ரோட்ஸி அபு ஹாசான் தெரிவித்தார். தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் முன் இருக்கையில் இருந்த 39 வயதான பயணி உயிரிழந்தார் என்றார் அவர்.
விபத்துக்கு முன்னர், 36 வயதான மனைவி ஓட்டிச் சென்ற எம்.பி.வி, பெண்டாங்கிலிருந்து கோத்தா சாரங் செமுட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, 29 வயது ஆடவர் ஓட்டி வந்த டொயோட்டா ஹைலக்ஸ் ரக நான்கு சக்கர வாகனம், திடீரென எதிர்ப்பாதைக்குள் நுழைந்து எம்.பி.வி-யின் முன்பக்கத்தில் நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதலின் விளைவாக, எம்.பி.வி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், உயிரிழந்தவர் முன் இருக்கையில் சிக்கிக்கொண்டார். பின்னர், அவர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டார்.
காயமடைந்த அனைவரும் பெண்டாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.


