மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரின் பங்குரிமை விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

16 பிப்ரவரி 2026, 9:32 AM
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரின் பங்குரிமை விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
கோலாலம்பூர், பிப் 16- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கியின் பங்குரிமை விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் அமைச்சரவை உறுதியாக உள்ளதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.அரசு தலைமை வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமது தசுகி முக்தார் தலைமையில் இந்தச் சிறப்பு விசாரணைக் குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறையான நீதியை வழங்கும் வகையில் இந்த விசாரணை மிக விரிவாக நடத்தப்படும் என்று அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக, ஒரு நிதிச் சேவை நிறுவனத்தில் அசாம் பாக்கி பங்குகளை வைத்திருப்பதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், அந்தப் பங்குகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைமுறைகளுக்கு உட்பட்டே வாங்கப்பட்டதாக அசாம் பாக்கி அண்மையில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஃபஹ்மி ஃபட்சில், அமைதியான முறையில் ஒன்று கூட மக்களுக்கு உரிமை உண்டு என்றார்.
அந்தப் போராட்டத்தில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.ரபிஸி ரம்லி மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, இது குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று ஃபஹ்மி பதிலளித்தார்.
சட்டத்தின் அடிப்படையில் அமைதியாகப் போராடுவது மக்களின் உரிமை என்பதால் இதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.இதற்கிடையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் இனம், மதம் மற்றும் அரச நிறுவனங்கள் (3R) தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசப்பட்டதா என்பதைப் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அவ்வாறு ஏதேனும் சட்டமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் தலைமைப் போலிஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.