கோலாலம்பூர், பிப். 16– மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான விவகாரம் குறித்து தலைநகரில் இன்று நடைபெற்ற பேரணியில், இனம், சமயம் மற்றும் அரசமைப்பு (3R) தொடர்பான எந்த கூறுகளும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்வதற்காக காவல்துறை விசாரணையைத் தொடரும்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ், பேரணியின் அனைத்து அம்சங்களையும் காவல்துறை ஆராய்ந்து வருவதாகவும், 3R தொடர்பான கூறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், மேலதிக நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை திறக்கப்படும் என்றும் கூறினார்.
"தற்போது வரை, பேரணி தொடங்கியது முதல் முடியும் வரை அதன் முழுமையான தன்மையை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது," என்று அவர் இன்று இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பிற்பகல் 4 மணியளவில் தொடங்கி இரண்டு மணி நேரம் கழித்து முடிவடைந்த இப்பேரணி, ஒரு வணிக வளாகத்தின் முன்பிருந்து மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கி நடைபெற்றது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் இது அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பேரணி சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, ஏற்பாட்டாளர்களிடமிருந்து முன்கூட்டியே அறிவிப்பைப் பெற்று, அவர்களுடன் கலந்துரையாடல் அமர்வை நடத்தியதாக காவல்துறை தெரிவித்தது.
"பேரணி நல்ல முறையில் கட்டுப்பாட்டுடன் நடைபெற்றது. இதில் சுமார் 200 பேர் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது," என்றார் அவர்.
பேரணியின் போது நிலைமையைக் கட்டுப்படுத்த கோலாலம்பூர் காவல்துறை தலைமையகம் மற்றும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த சுமார் 600 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று ஃபடில் கூறினார்.


