ஷா ஆலாம், பிப் 15: மலேசியக் காற்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எம்) தலைவர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதில் தமக்கு ஆர்வமில்லை என சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா தெரிவித்தார்.
தமது முழுக் கவனத்தையும் சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் மீது மட்டுமே செலுத்த விரும்புவதாகவும், அந்த அணிக்குத் தனது முழுமையான அர்ப்பணிப்பை வழங்க விரும்புவதாகவும் அவர் கூறியதாக அஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
“இல்லை, எனக்கு (எஃப்.ஏ.எம் தலைவர் பதவியில்) ஆர்வமில்லை. எனக்கு சிலாங்கூர் அணியில் மட்டுமே ஆர்வம் உள்ளது. நாங்கள் அடைய வேண்டிய இலக்குகள் பல உள்ளன.
“நாம் நடுவர்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இது வெறும் ஆட்டக்காரர்களை மட்டுமல்ல, முழு காற்பந்து சூழலமைப்பையும் உள்ளடக்கியது.
“அதுவே இப்போது எனது ஒரே நோக்கம். சிலாங்கூர் காற்பந்தின் மீது மட்டுமே என் கவனம் குவிந்துள்ளது," என்று இன்று நடைபெற்ற ‘ஜெமிலாங்: சிலாங்கூர் காற்பந்தின் வரலாற்றுப் பயணம்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, எஃப்.ஏ.எம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாகப் பதவி விலகினர். புதிய தேர்தலை நடத்துவதற்கு முன்பு, ஆசியக் காற்பந்து கூட்டமைப்பின் (AFC) கண்காணிப்புக் குழுவின் மதிப்பீட்டு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பதவி விலகலைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிந்துரைக்கப்பட்டனர். தெங்கு அமீர் ஷாவைத் தவிர, பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா மற்றும் ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரும் அப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.





