பெட்டாலிங் ஜெயா, பிப் 14: இன்று ஸ்ரீ சிலாங்கூர் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற பி.கே.என்.எஸ் சிலாங்கூர் மாஸ்டர்ஸ் 2026 போட்டியில் வாகையாளராகும் உள்நாட்டு வீரர் கவிஷ் வரதனின் கனவு கலைந்தது.
பரபரப்பான இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் நிக்லஸ் சியாமிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மூன்றாவது பிளேஆஃப் சுற்றில் 'பேர்டி' அடித்து நிக்லஸ் தனது வெற்றியை உறுதி செய்தார்.
'பார்' நிலைக்குக் கீழ் மூன்று புள்ளிகளுடன் ஆட்டத்தை நிறைவு செய்த நிக்லஸ், இதன்வழி 13 ஆவது முறையாக நடைபெற்ற இப்போட்டியின் வாகையாளரானார்.
முன்னதாக, முதல் பிளேஆஃப் சுற்றில் நிக்லஸ் மற்றும் கவிஷ், தாய்லாந்து வீரர் ரஞ்சனாபோங் யூப்ராயோங்குடன் மோதினர். மூவரும் மொத்தம் 274 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால் இந்த பிளேஆஃப் சுற்று நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், நிக்லஸ் 30,625 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசையும் வெற்றித் கோப்பையையும் தட்டிச் சென்றார்.
வாகையாளர் பட்டத்தை நழுவவிட்ட போதிலும், 'சிறந்த மலேசியத் தொழில்முறை வீரர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வென்றார்.
பரிசுகளை மாநில அரசுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபட்லி அஹ்மத் தஜுடின் வழங்கினார். அவருடன் பி.கே.என்.எஸ் குழுமத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி (வியூகக் கூட்டணி), பொறியியலாளர் முகமட் கமர்ஸான் முகமட் ராய்ஸ் உடனிருந்தார்.
பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 175,000 அமெரிக்க டாலர் (சுமார் 685,000 ரிங்கிட்) மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 144 தொழில்முறை வீரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களில் ஆசிய மேம்பாட்டு சுற்றுப்பயணத்தைச் (ADT) சேர்ந்த 80 வீரர்கள், மலேசியத் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணத்தைச் (PGM) சேர்ந்த 40 வீரர்கள் மற்றும் அழைப்பின் பேரில் 24 வீரர்கள் அடங்குவர்.
#PKNSSelangorMasters2026 #Golf #NicklausChiam #KhavishVaradan #SeriSelangorGolfClub #SukanSelangor #MediaSelangor
original news : https://mediaselangor.com/ms/2026/02/343941
Photo link if have :
https://mssb-media.xcms.io/publisher-




