அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குகள் விவகாரம்: விசாரணை தொடங்கியது - தலைமை வழக்கறிஞர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குகள் உரிமை குறித்த சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இத்தகவலை தலைமை வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமது டுசுகி மொக்தார் உறுதிப்படுத்தியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“விசாரணை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தொடக்கக்கட்ட நடவடிக்கையாக, இந்த வழக்கு தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்,” என்று சனிக்கிழமை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை அன்று அமைக்கப்பட்ட இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக முகமது டுசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ வான் அஹ்மத் டஹ்லான் அப்துல் அஜிஸ் மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குட்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை வழங்கும் வகையில், இக்குழு விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.
விசாரணையின் முடிவுகளும் பரிந்துரைகளும் உரிய நடைமுறைகளின் அடிப்படையில் மேலதிக பரிசீலனைக்காகப் பிரதமர் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
முன்னதாக, புளூம்பெர்க் தனது அறிக்கையில், கார்ப்பரேட் பதிவுகளின் அடிப்படையில் அசாம் பாக்கி ஒரு நிதிச் சேவை நிறுவனத்தில் மில்லியன் கணக்கான பங்குகளை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
எனினும், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நிதிச் சேவை நிறுவனத்தில் தனக்கு இருந்த 800,000 ரிங்கிட் மதிப்பிலான பங்குகள் வெளிப்படையாகவும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாங்கப்பட்டதாகவும் அசாம் பாக்கி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் மறைக்கப்படவில்லை என்றும், அது முழுமையாக அறிவிக்கப்பட்டது என்றும், மேலும் கடந்த ஆண்டு வாங்கப்பட்ட அந்தப் பங்குகள் அதே ஆண்டிலேயே விற்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பங்குகள் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாக அசாம் பாக்கி உறுதியளித்துள்ளார்.


