ஜகார்த்தா, பிப்ரவரி 14 – அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் நிர்வாகத்தின் முதல் ஆண்டில், உற்பத்தித் திறனற்ற செலவினங்களைக் குறைத்து, வரவுசெலவுத் திட்டத் திறனை கடுமையாக்கியதன் மூலம் இந்தோனேசியா 308 டிரில்லியன் ரூபியாவிற்கு (18 பில்லியன் அமெரிக்க டாலர்) மேல் சேமித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணங்கள், சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள், அத்தியாவசியமற்ற கூட்டங்கள் மற்றும் ஆய்வுகளைக் குறைப்பது உள்ளிட்ட கடுமையான உள் வரவுசெலவுத் திட்டக் கட்டுப்பாட்டின் விளைவாக இந்த நிதி ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"இனிமேல் அதிக ஆய்வுகளும் பகுப்பாய்வுகளும் தேவையில்லை. உள்கட்டமைப்பு பற்றாக்குறை இருந்தால், நாங்கள் உடனடியாகச் செயல் படுவோம். கிராமங்களுக்குப் பாலம் தேவைப் பட்டால், நாங்கள் கட்டுகிறோம். மக்கள் பசியாக இருந்தால், நாங்கள் உணவு தேடுகிறோம். அதிக பகுப்பாய்வு தேவையில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த நடவடிக்கைகள் மூலம், நாங்கள் 308 டிரில்லியன் ரூபியாவைச் சேமித்துள்ளோம், இது 18 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமம். மேலும் எங்களால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும். நாம் விரயங்களைக் குறைத்து, நிதி கசிவுகளை மூட வேண்டும்," என்று அவர் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்ற 'இந்தோனேசியாவின் பொருளாதாரக் கண்ணோட்டம் 2026' கருத்தரங்கில் கூறினார்.
சேமிக்கப்பட்ட பணம், இதுவரை 60.2 மில்லியன் பயனாளிகளுக்குப் பயனளித்துள்ள இலவச சத்தான உணவு (MBG) முயற்சி உட்பட, நேரடிப் பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னுரிமைத் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக பிரபோவோ கூறினார்.
ஒரு வளர்ந்த நாடாக மாறும் இலட்சியம், குறிப்பாக மக்களின் செழிப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் வளங்களை உகந்த முறையில் நிர்வகிப்பதன் மூலம், அளவிடப்பட்ட உத்திகள் மூலம் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எங்களுக்கு உயர்ந்த லட்சியங்கள் உள்ளன, ஆனால் யதார்த்தமான அணுகுமுறையைக் கொண்டுள்ளோம். நாட்டின் அனைத்து செல்வங்களையும், நமது இயற்கை வளங்கள் அனைத்தையும் நாம் பாதுகாத்து, நிர்வகித்து, இந்தோனேசிய மக்கள் அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். அதுவே நமது இலக்கு," என்றார் அவர்.
தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது உள்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்று பிரபோவோ வலியுறுத்தினார்.
அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிப்பதற்கான தனது உறுதியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் நீதியை நிலைநாட்ட சட்ட அமலாக்கத்தில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
இந்தோனேசியா: உற்பத்தித்திறனற்ற செலவினங்களைக் குறைத்ததன் மூலம் 308 டிரில்லியன் ரூபியா சேமிப்பு - பிரபோவோ
14 பிப்ரவரி 2026, 5:42 AM


