பாங்காக், பிப் 14 (பெர்னாமா) -- பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையிலான தாய்லாந்தின் பூம்ஜாய்தாய் கட்சி, பொதுத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பியூ தாய் கட்சியின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பூம்ஜாய்தாய் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அவசியமாகின. இதனைத் தொடர்ந்தே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
நீண்டகால அரசியல் வெற்றிடத்தைத் தவிர்ப்பதற்காக, பியூ தாய் கட்சித் தலைவர்களுடன் பூம்ஜாய்தாய் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனுதின் கூறினார்.
"வாக்கு எண்ணிக்கை அடிப்படையில், முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை என்றாலும், நீண்ட அரசியல் வெற்றிடத்தைத் தவிர்ப்பதற்காக, ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன."
"அரசாங்கத்தை அமைப்பதில் பூம்ஜாய்தாய் கட்சியை மையக் கட்சியாக ஆதரிக்க பியூ தாய் கட்சி தயாராக உள்ளது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்," என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பூம்ஜாய்தாய் கட்சி 400 தொகுதி இடங்களில் 174-ஐ வென்று முன்னிலை வகித்தது, ஆனால் தனியாக அரசாங்கம் அமைக்கத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட 94 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலான ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி, மக்கள் கட்சி 87 இடங்களுடன் பின்தங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பியூ தாய் கட்சி (58), க்ளா தாம் கட்சி (56) மற்றும் ஜனநாயகக் கட்சி (10) இடங்களைப் பெற்றுள்ளன.
பியூ தாய் கட்சியின் ஆதரவு அனுதினுக்கு தெளிவான நாடாளுமன்றப் பெரும்பான்மையையும், மேலும் நிலையான கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பையும் வழங்கும்.
தாய்லாந்தின் 500 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றம், கலப்பு தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் 400 தொகுதி இடங்கள் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி என்ற அடிப்படையிலும், 100 கட்சிப் பட்டியல் இடங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் அமைக்க 251 வாக்குகளின் அறுதிப் பெரும்பான்மை தேவை.
தாய்லாந்தை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிலையான, வலுவான மற்றும் நீடித்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த இரு கட்சிகளிடமும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருப்பதாக அனுதின் கூறினார்.
"நாங்கள் ஒரு காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளோம். மையக் கட்சியாக, நாங்கள் மற்ற கட்சிகளை வரிசைப்படி அழைத்து, நாடு சீராக முன்னேறுவதை உறுதிசெய்ய அவர்களின் ஒத்துழைப்பைக் கோருவோம்."
"ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது, இனி அரசாங்கத்தை அமைப்பது குறித்து மேலும் விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவோம்," என்றார் அவர்.
பியூ தாய் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசெர்ட் சந்தரருவாங்தோங், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யோட்சனன் வோங்ஸ்வஸ்டி மற்றும் முன்னாள் மூத்த துணைப் பிரதமர் சூரியா ஜுவாங்ரூங்ருவாங்கிட் ஆகியோர் அடங்கிய பியூ தாய் பிரதிநிதிகளுடன் அனுதின் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில், பூம்ஜாய்தாய் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்கும், கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவிப்பதற்கும் பியூ தாய் கட்சியின் வருகை அமைந்ததாக பிரசெர்ட் கூறினார்.
அரசாங்கத்தில் இணைவதற்கான விரிவான நிபந்தனைகள் மற்றும் ஏற்பாடுகள் அடுத்த கட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
பூம்ஜாய்தாய் கட்சி இதற்கு முன்பு 2023 தேர்தலுக்குப் பிறகு பியூ தாய் தலைமையிலான ஆளும் கூட்டணியில் உறுப்பினராக இருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவுக்கும் முன்னாள் கம்போடியப் பிரதமர் ஹுன் சென்னுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் பதிவு கசிந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட்டணியில் இருந்து விலகியது.
தாய்லாந்து தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் 60 நாட்களுக்குள் - அதாவது ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் - அங்கீகரிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்குப் பிறகு 15 நாட்களுக்குள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கூட வேண்டும்.
-- பெர்னாமா
தாய்லாந்தில் கூட்டணி அரசாங்கம் அமைக்க பியூ தாய் கட்சியின் ஆதரவை பூம்ஜாய்தாய் கட்சி ஏற்றது
14 பிப்ரவரி 2026, 3:48 AM


