சிலாங்கூர் வளர்ச்சி, பொருளாதாரம், கலாச்சாரம், மனிதாபிமான விழுமியங்களை சமநிலைப்படுத்துகிறது: மந்திரி புசார்

10 பிப்ரவரி 2026, 1:33 AM
சிலாங்கூர் வளர்ச்சி, பொருளாதாரம், கலாச்சாரம், மனிதாபிமான விழுமியங்களை சமநிலைப்படுத்துகிறது: மந்திரி புசார்

ஷா ஆலாம், பிப் 10: சிலாங்கூரின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பொருளாதார அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, மாறாக கலாச்சாரம் மற்றும் கலை சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இதுபோன்ற நிகழ்வுகள் மனிதாபிமான விழுமியங்களைப் புகட்டவும், பகுத்தறிவு சிந்தனையை உருவாக்கவும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் மதிப்பை வழங்கவும் உதவும் என்றார்.

அவரைப் பொறுத்தவரை, விடுதலைப் போராட்ட வீரர்கள் வாசிப்பு மற்றும் எழுத்து கலாச்சாரத்தை முன்னெடுத்ததன் மூலமே பல நாடுகளில் வளர்ச்சி தொடங்கியது என்றும், அதுவே சமூகம் மற்றும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் வரலாறு நிரூபிக்கிறது.

"ஒரு நாகரிகத்தின் வளர்ச்சியில் இலக்கியமும் கலாச்சாரமும் முக்கிய கூறுகளாகும். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஆட்சிக்கும் உயிரூட்டுவதால், சிலாங்கூர் இந்த அம்சத்தைப் புறக்கணிக்காது.

"2024-ஆம் ஆண்டில் 26.2 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (KDNK) பங்களித்து, ரிம432 பில்லியன் மதிப்புடன் பொருளாதார வளர்ச்சியில் சிலாங்கூர் வெற்றியாளராகத் திகழ்கிறது. இதன்வழி, ரிம400 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார மதிப்பைப் பதிவுசெய்த ஒரே மாநிலமாகவும் இது விளங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, மாநிலத்தில் கிட்டத்தட்ட 44,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, மேலும் ரிம
51 பில்லியன் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீடுகளையும் ஈர்த்துள்ளது.

“இருப்பினும், மனித மேம்பாடு புறக்கணிக்கப்பட்டால், இந்த பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சி முடமாகிவிடும். மனிதாபிமான விழுமியங்கள் இல்லாமல், அது ஒரு கடினமான சமூகத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட, சிலாங்கூர் அனைத்துலக இலக்கியம் மற்றும் கலாச்சார கலந்துரையாடல் (DASA) 2026-இல் நேற்று இரவு உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு கொள்கை மற்றும் அமலாக்கத்திலும் மனிதாபிமான விழுமியங்கள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மாநில அரசு நிர்வாகக் கருப்பொருளையும் மாற்றியுள்ளது என்று அமிருடின் கூறினார்.

"முன்பு நாம் ‘பொருளாதாரத்தை மக்களுக்கானதாக்குதல்’ (Merakyatkan Ekonomi), பின்னர் ‘மக்கள் மீது அக்கறை’ (Peduli Rakyat) என்ற கருப்பொருள்களைப் பயன்படுத்தினோம். இப்போது, மக்களுக்கு உதவும் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய ‘இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங்’ என்ற கருப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

"இதை பண மதிப்பில் மட்டும் பார்க்காமல், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உதவி, ஆதரவு மற்றும் வாழ்க்கைத் தரத்தை ஒன்றிணைந்து உயர்த்துவதன் மூலம் மக்களிடையே மனிதாபிமான விழுமியங்களை வளர்க்க விரும்புகிறோம்," என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.