சிலாங்கூரில் உள்ள சாலைகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக 12.5 கோடி நிதி ஒதுக்கீடு- டத்தோ இர் இஷாம் ஹஷிம் தகவல்

9 பிப்ரவரி 2026, 8:09 AM
சிலாங்கூரில் உள்ள சாலைகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக 12.5 கோடி நிதி ஒதுக்கீடு- டத்தோ இர் இஷாம் ஹஷிம் தகவல்

ஷா ஆலாம், பிப் 9- பொதுப்பணித் துறையின் (JKR) கீழ் உள்ள மாநில சாலைகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக, மலேசிய சாலைப் பதிவேடுகள் தகவல் அமைப்பு (MARRIS) நிதியிலிருந்து ஆண்டுதோறும் 12.5 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக மாநில உள்கட்டமைப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இர் இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் 2026 முதல் 2030 வரையிலான காலத்திற்கு இன்ஃப்ராசெல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புல் வெட்டுதல், வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்தல் மற்றும் சாலை பராமரிப்பு போன்ற வழக்கமான பணிகளை இது உள்ளடக்கும்.

"இன்று, மாநில அரசு பொதுப்பணித் துறை சாலைகளுக்கான நீண்டகால பராமரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் கடிதத்தை இன்ஃப்ராசெல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.

"சிலாங்கூர் போன்ற ஒரு வளர்ந்த மாநிலத்தில் சாலைப் பராமரிப்பு மேலாண்மையில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களைச் சமாளிப்பதற்கும், குறிப்பாக பொதுப்பணித் துறையை நவீனமயமாக்குவதற்கும் மாநில அரசு எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் பொதுப்பணித் துறையின் மினி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற, 2026-2030 ஆம் ஆண்டுக்கான நீண்டகால சாலைப் பராமரிப்பு ஒப்பந்தம் மற்றும் புதிய வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஒப்படைப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதே நிகழ்வில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த பழைய சொத்துகளுக்குப் பதிலாக, MARRIS நிதி ஒதுக்கீட்டின் கீழ் வாங்கப்பட்ட 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 11 புதிய இயந்திரங்கள் சிலாங்கூர் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தச் சொத்துகளில் இரண்டு அகழ்வாராய்வுக் கருவிகள், மூன்று மண் அள்ளும் இயந்திரங்கள், 18 மீட்டர் உயரத்திற்குச் செல்லும் ஒரு தூக்கி லோரி மற்றும் நான்கு டிப்பர் லோரிகள் ஆகியவை அடங்கும்.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் சாலைப் பராமரிப்பு, போக்குவரத்து விளக்குகளைப் பழுதுபார்த்தல் மற்றும் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காகத் துறையின் சார்பில் பயன்படுத்தப்படும் என்று இர் இஷாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.