வாஷிங்டன், பிப் 8 - இம்மாத இறுதியில், பூமியிலிருந்து பார்க்கும்போது ஆறு கிரகங்கள் ஒரே வரிசையில் தோன்றும் அதிசய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு 'கிரகப் பேரணி' என அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது புதன், சுக்கிரன், சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களை மாலை நேரத்தில் வானில் காண முடியும். இதில் சனி, சுக்கிரன் மற்றும் புதன் ஒன்றுக்கொன்று அருகில் தோன்றும் நிலையில், வியாழன் கிரகம் சந்திரனின் அருகில் அதிக பிரகாசத்துடன் காணப்படவுள்ளது.
இதற்கிடையில், யூரேனஸ் மற்றும் நெப்ட்யூன் கிரகங்கள் மங்கலான ஒளியுடன் இருப்பதால், அவற்றை கண்களால் நேரடியாகக் காண முடியாது. அந்த கிரகங்களைப் பார்க்க தொலைநோக்கி அல்லது இரட்டை கண்ணாடி தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து கிரகங்களும் 'எக்ளிப்டிக்' எனப்படும் ஒரே பாதையில் சூரியனைச் சுற்றி பயணம் செய்வதனால், அவையெல்லாம் வானில் ஒரே கோட்டில் தோன்றுகின்றன என்று நாசா குறிப்பிட்டுள்ளது.


