செராஸ் வணிக வளாகத்தில் அதிரடி சோதனை: 152 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

6 பிப்ரவரி 2026, 2:57 AM
செராஸ் வணிக வளாகத்தில் அதிரடி சோதனை: 152 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், பிப் 6: கோலாலம்பூர், செராஸில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் செயல்படும் உணவகங்களில் நேற்றிரவு நடத்தப்பட்ட 'ஓப் செலெரா' (Op Selera) மற்றும் 'ஓப் சாப்பு' (Op Sapu) சோதனையில், பல்வேறு குற்றங்களுக்காக 152 சட்டவிரோதக் குடியேறிகளை மலேசிய குடிவரவுத் துறை கைது செய்தது. இரவு 8 மணிக்குத் தொடங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சோதனையில், மொத்தம் 890 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 458 பேர் வெளிநாட்டினர் மற்றும் 432 பேர் உள்ளூர்வாசிகள் என்று குடிவரவுத் துறையின் துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 82 ஆண்களும் 70 பெண்களும் அடங்குவர். 21 முதல் 42 வயதுக்குட்பட்ட இவர்கள் மியான்மர், சீனா, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். முறையான பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிச் சீட்டு நிபந்தனைகளை மீறியது, தங்கும் காலத்தை விடக் கூடுதல் காலம் தங்கியது மற்றும் அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளை வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் பிடிபட்டனர்.

அந்த வணிக வளாக உணவகங்களில் அதிகப்படியான வெளிநாட்டினர் பணிபுரிவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஒரு வார கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தச் சோதனையில் 112 குடிவரவுத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். பிடிபட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய குடிவரவுத் தடுப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், 'புலம்பெயர்ந்தோர் தாயகம் திரும்பும் திட்டம் 2.0' (PRM 2.0) குறித்துப் பேசிய டத்தோ லோக்மான், இதுவரை சுமார் 155,000 வெளிநாட்டினர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 138,000 பேர் தங்களின் சொந்த நாடுகளுக்குத் தானாக முன்வந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளனர், அவர்களுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியர்கள் உள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் இத்திட்டம் நிறைவடைவதற்குள் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை வழியாக நாட்டிற்கு RM77 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.