ஷா ஆலம், பிப் 4: வணிக வளாகங்கள் பொதுப் பாதைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், காஜாங் நகராட்சி மன்றம் பண்டார் மக்கோத்தா செராஸ் பகுதிகளில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டது.
பொதுப் பாதைகளில் தடைகள் இருப்பதாக வந்த புகார்கள் மற்றும் தொடர் கண்காணிப்பைத் தொடர்ந்து, ஜாலான் தெமெங்குங் 19/9, ஜாலான் தெமெங்குங் 3/9 மற்றும் ஜாலான் மக்கோத்தா ரெசிடென்ஸ் 1 ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, மூன்று உணவகங்கள் பொதுப் பாதையில் நாற்காலிகள், மேசைகள் மற்றும் வணிக உபகரணங்களை வைத்து இடையூறு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இது பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதிக்கும் வகையில் அமைந்திருந்தது.
"இதன் விளைவாக, 1974-ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் பிரிவு 46(1)(d)-ன் கீழ் சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு எதிராகக் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காகக் காஜாங் நகராட்சி மன்றத்தின் அமலாக்கத் துறை சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன," என்று நகராட்சி மன்றம் தனது முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் உள்ள தடைகளை அகற்ற இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடரும் என்றும், சட்ட விதிமீறல்களைத் தடுத்து மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் நகராட்சி மன்றம் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


