ஷா ஆலம், பிப் 4: சைபர்ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஜனவரி 29 அன்று மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், உரிமம் இன்றி வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு எதிராக சிப்பாங் நகராட்சி மன்றம் இரண்டு அபராத நோட்டீஸ்களை வழங்கியதோடு, 21 பறிமுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
குறிப்பாக கட்டுமானத் தளங்கள் மற்றும் அனுமதியற்ற பொது இடங்களில் முறையான உரிமம் இன்றி வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகளைக் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்தச் சோதனை கவனம் செலுத்தியதாக சிப்பாங் நகராட்சி மன்றம் தெரிவித்தது. பெர்சியாரான் சிப்பாங் , பெர்சியாரான் மல்டிமீடியா மற்றும் பெர்சியாரான் சைபர்பாயிண்ட் செலாத்தான் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட 21 பறிமுதல் நடவடிக்கைகளில், இரண்டு உள்ளூர் வியாபாரிகளுக்கும், மீதமுள்ள 19 வெளிநாட்டு வியாபாரிகளுக்கும் எதிரானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனையானது 'சிப்பாங் நகராட்சி மன்ற சிறு வணிகர்கள் துணைச் சட்டம் 2007' பிரிவு 3-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், அனைத்து வியாபாரிகளும் முறையான உரிமம் இன்றி வணிக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் துணைச் சட்டங்களுக்கு எப்போதும் கீழ்ப்படியுமாறும் சிப்பாங் நகராட்சி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களது நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகள் எப்போதும் சீராகவும், பாதுகாப்பாகவும், சட்டவிரோத வியாபாரிகள் அற்ற இடமாகவும் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


