கோலாலம்பூர், பிப் 3- யாயாசா அகால்புடி அறவாரியத்தின் வழக்கு விசாரணை தொடர்பாக தனக்கு எதிரான 47 ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் குற்றச்சாட்டுகளிலிருந்து நிபந்தனையற்ற விடுவிப்பு வேண்டும் என்று கோரி நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி இது தொடர்பாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி 47 குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை ஏதுமில்லை (NFA) என அரசு தலைமை வழக்கறிஞர் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞரை (Public Prosecutor) எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டுஇந்த விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் தரப்பு குறிப்பிட்டது.
இந்ந வழக்கு விசாரணை தொடர்பாக நிபந்தனையற்ற விடுவிப்பு என்ற தீர்ப்பினை அளித்த உயர்நீதிமன்றத்தின் செயலைத் தொடர்ந்து இந்த விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடியின் வழக்கறிஞர் டத்தோ ஹிஷாம் தெ பொ தெயிக் கூறினார்.
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தம்மை விடுவிக்க செய்யும் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை எதிர்வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நுருல்ஹுடா நுர் அயின் முஹம்மட் தெரிவித்தார்.


